Friday, January 31, 2014

தமிழகத்தில் பறிபோகிறதா சமூகநீதி?

சமூக நீதியில் முன்னோடி மாநிலம் என்று பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்கள் சமூக நீதிக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற ஐயத்தை சமூக இயக்கங்களுக்கு தோற்றுவித்துள்ளது. சென்னையில் செயல்படவிருக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்கிற தமிழக அரசின் அறிவிப்பு சமூக நீதிக்கான போராட்டங்கள் பல நடந்த தமிழக மண்ணில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

அரசின் அறிவிப்பையடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவிப்பினை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் இந்த அறிவிப்பை எதிர்க்கின்றன. திராவிடர் கழகம் பெரியார் திடலில் இதுதொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டி விவாதித்தது. ஜனவரி 13 அன்று பெரியார் திடலில் பொதுக்கூட்டம் ஒன்றும் சமூக நீதியை வலியுறுத்தி நடந்தது. தி.மு.க. ஜனவரி 21 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் அசைந்துகொடுக்க மறுக்கிறார்.

சென்னையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கான பணிகளுக்கான விளம்பரத்தை வெளியிட்ட தமிழக அரசு அவ்விளம்பரத்தில் 4 விஷயங்களைத் தெரிவித்திருந்தது. 1. இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது 2.ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் 3. இந்தியா முழுவதுமிருந்து மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். 4. ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்துடன் அவர்களுக்கான ஊதியமும் இப்போதிருப்பதைவிட பன்மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. தி.மு.க. தலைவரின் எதிர்ப்பு அறிக்கை வந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட விளக்க அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை சுட்டிக்காட்டியிருந்தார். ”இந்திய அரசுக்கு எதிராக எய்ம்ஸ் பேராசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது 18.7.2013 தீர்ப்பில், பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை, பொறியியல் மற்றும் இதர அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பதவிகளில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றுவது சரியாக இருக்காது என்று இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற இயலாது என்று தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினையும், நடைமுறையில் உள்ள விதியினையும் முன்மாதிரியையும் கருத்தில்கொண்டே விளம்பரம் வெளியிடப்பட்டது” என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

“தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ள வரிகள் கருத்துரை ஆலோசனைகளேதவிர தீர்ப்பு அல்ல; முதல்வர் குறிப்பிடும் தீர்ப்புக்குப் பின் அதே ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர் பதவிகளுக்கான விளம்பரத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்குப் பின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செப்டம்பர் 12 2013 அன்று ஓர் ஆணை பிறப்பித்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து ஒருபக்கம் இருந்தாலும் புதிய நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றவேண்டும் என ஆணை பிறப்பித்தது.” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார். முதல்வர் ஜெயலலிதா தன் அறிக்கையில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என்று கூறியிருந்தார். இதை மறுத்த திராவிடர் கழகம் ஆதாரமாக 16.11.2013 அன்று ரிஷிகேஷ் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணி நியமன ஆணையில் ஒப்பந்த நியமனமாக இருந்தாலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதற்கான ஆதாரத்தையும் பத்திரிகைகளுக்கு வெளியிட விஷயம் சூடுபிடித்தது.

முன்பு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக, 1980 முதலே தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு பங்கம் வந்துவிடாமல் காப்பதற்காக அதுவரை அரசு ஆணையாக மட்டுமிருந்த இடஒதுக்கீடு சட்டமன்றத்தைக் கூட்டி  முதல்முறையாக அரசியல் சட்ட 31 -சி பிரிவின்படி சட்டமாக்கப்பட்டது. 1992 மண்டல் ஆணைக்கு முன்பிருந்தே செயல்படும் வகையில் அரசியல் 76வது சட்டத் திருத்தமாக 9 வது அட்டவணைப் பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டு, நரசிம்மராவ் காலத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கும்கூட தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாகவே அப்போது ‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ என்று அப்போது கி.வீரமணி ஜெயலலிதாவை அடைமொழியிட்டு அழைத்தார். அந்த அடைமொழியை இன்றளவும் அதிமுக பயன்படுத்துகிறது. ஆனால் இப்போது அதே ஜெயலலிதாதான் இட ஒதுக்கீடு கிடையாது என்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறது தமிழக அரசு. பா.ம.க., தி.மு.க. போன்ற கட்சிகள் குற்றம்சாட்டியபின் பெயருக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது பதில் அர்த்தமற்றது.விஞ்ஞானிகள் போன்ற ஆராய்ச்சி தேவைப்படும் பதவிகளுக்குத்தான் திறமை அடிப்படையில் நியமனம் என்பதால் இட ஒதுக்கீடு தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை உயர் அலுவலர் பதவி நியமனத்துக்கு இது பொருந்தாது. புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இட ஒதுக்கீட்டு முறை உள்ளது. அங்கு முடியும்போது இங்கு மட்டும் ஏன் முடியாது? சமூக நீதியில் அக்கறை உள்ளதாக கூறும் முதல்வர் உண்மையிலேயே அக்கறை இருந்தால் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தவேண்டும்” என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.

பல்நோக்கு மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படுவதால் அதில் இட ஒதுக்கீட்டை மறுப்பது சட்டவிரோதம் என்கிறது திராவிடர் கழகம். ”சில சிறப்புத் தகுதியுள்ள் மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு தருவது விரும்பத்தக்கதல்ல என்று கருதலாம்” என்று வெறும் கருத்துரையாக சொன்னதை சிரமமேற்கொண்டு நிறைவேற்றும் தமிழக அரசு அதிலேயே அடுத்தப் பகுதியாக இதை மத்திய அரசுதான் தீர்மானிக்கவேண்டும் என்று கூறியதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் கேட்கிறது.

“தமிழக அரசு திட்டமிட்டு இட ஒதுக்கீட்டை புறக்கணிப்பதற்கான காரணங்களைத் தேடுகிறது. தமிழக வரலாற்றில் இட ஒதுக்கீடு கொண்டுவரவே அத்தனை கட்சிகளும் இயக்கங்களும் பாடுபட்டிருக்கின்றன. முதல் முறையாக ஜெயலலிதாதான் இட ஒதுக்கீடு வேண்டாம் என்பதற்கான காரணங்களைத் தேடித் தேடிச் சொல்கிறார். ஆசிரியர் நியமனத்திலும் இதையேதான் செய்தது தமிழக அரசு. தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் எட்டிப் பிடிக்கமுடியாத அளவில் கட் ஆஃப் மதிப்பெண்களை வைத்து அவர்களை அருகிலேயே நெருங்கவிடாமல் செய்தது தமிழக அரசு. இப்போது மருத்துவமனை விவகாரத்திலும் இப்படியே செயல்படுகிறது” என திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் குற்றம் சாட்டுகிறார். மேலும் ‘பல்நோக்கு சிறப்பு நிறுவனங்களில்’ இட ஒதுக்கீடு தேவையில்லை என்றால், இட ஒதுக்கீட்டில் அக்கறை இருந்தால், தமிழக அரசு ஏன் அந்தப் பெயரில் இதைத் தொடங்கவேண்டும்? வேறு பெயர் வைத்துவிட்டுப் போகவேண்டியதுதானே?” என்கிறார்.

கருணாநிதி தன் அறிக்கையில் “மருத்துவர்களுக்கு ஒன்றரை, இரண்டு மடங்கு ஊதியம் ஏன்?” என்று கேட்டதற்கு பதிலளித்த ஜெயலலிதா “ஏன் ஏழை எளிய மக்களுக்கு நல்ல திறமையான மருத்துவர்கள் கிடைக்கக்கூடாதா? தனியார் துறையில் பணிபுரியும் அவர்கள் இப்படி ஊதியம் தந்தால்தான் வருவார்கள்” என்று கூறியது வேறு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “அப்படியெனில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்தவர்கள் எல்லாம் திறமை குறைந்தவர்களா? தனியார்துறையில்தான் திறமையானவர்கள் உள்ளனரா?” என்றும் கேட்கிறார் கி.வீரமணி.

“இட ஒதுக்கீடு அற்ற இப்படிப்பட்ட முயற்சிகள் மூலம் மருத்துவத்தை கார்ப்பரேட் போல மாற்ற முயல்கிறது தமிழக அரசு. இதில் மக்களுக்கான அக்கறை இருக்காது. மேட்டிமைத்தனம்தான் இருக்கும். படிப்படியாக இட ஒதுக்கீட்டை தமிழகத்திலிருந்து நீக்க கதவுகளைத் திறந்துவிடுகிறது தமிழக அரசு. இதை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்” என்கிறார் விடுதலை ராஜேந்திரன்.

“வழக்கறிஞர் விஜயன் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வெற்றிபெறவில்லை. 69% போக மீதம் 31 சதவிகிதமே உள்ளது பொதுப் பிரிவுக்கு என்று அவர் வாதிட்டபோது, வேண்டுமானால் கூடுதலாக இடங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள் என்று தீர்ப்பு வந்தது. இப்படியெல்லாம் காப்பாற்றப்பட்ட சமூக நீதிக்கு பங்கம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டது உச்ச நீதிமன்றம். மத்திய அரசு தெளிவாக இட ஒதுக்கீடு தேவை என்று கூறிவிட்டது. இப்போது தமிழக அரசுதான் முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறது. வேண்டும் என்றும் முடிவு செய்யலாம். வேண்டாம் என்று முடிவுசெய்யலாம் என்று இரண்டு வாய்ப்புகள் அதன்முன் உள்ளன. சமூக நீதியில் உண்மையான அக்கறை இருந்தால் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுதான் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்” என்கிறார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன்.

(நன்றி : இந்தியா டுடே)




Tuesday, January 28, 2014

ஒரு தந்தையின் எதிர்ப்பார்ப்பு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 22 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் இருக்கிறார் நளினி. அவரது தந்தை 88 வயது பி.சங்கரநாராயணம் உடல்நலமின்றி இருக்கிறார். தன் தந்தையைப் பார்க்கவும் அவர் அருகில் ஒரு மாதம் இருந்து அவருடைய தேவைகளை கவனித்துக்கொள்ளவும் வேண்டி நளினி ஒரு மாத விடுப்பு கேடு கூடுதல் காவல்துறை டைரக்டர் ஜெனரல் மற்றும் சிறைத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு விண்ணப்பித்திருக்கிறார். தன் மகள் தன்னைப் பார்க்க வருவதற்காக எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் சங்கர நாராயாணன் மகளின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்.

தலையில் அடர்த்தியான வெள்ளை முடி. சவரம் செய்யப்படாத தாடியிலும் வெள்ளிக்கம்பிகள் மினுமினுக்கின்றன. கூரிய மூக்கு, வெள்ளை நிறத் தோலுடன் நல்ல உயரமாக இருக்கிறார் சங்கர நாராயணன். முகத்தில் காவல்துறையில் பணிபுரிந்ததன் அடையாளமாய் ஒரு கம்பீரம். இத்தனை இருந்தாலும் கண்களில் துயரம் வழிகிறது. அவரின் உடலில் வயோதிகம் தளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பேச்சில் விரக்தி, கோபம், இயலாமை, நம்பிக்கை என்று எல்லாம் கலந்த கலவையாய் வெளிப்படுகின்றன உணர்வுகள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் தந்தை சங்கர நாராயணன்.

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அம்பலவாணபுரத்தில் இருக்கிறது அந்த வீடு. ஹால் முழுவதும் கடவுளர் படங்களும் சிலைகளும். உள்ளே ஓர் அறை. அங்கேயுள்ள படுக்கையில் படுத்திருக்கிறார் சங்கர நாராயணன். முன்னாள் காவல்துறை ஆய்வாளர். சென்னையில் பணியாற்றிவிட்டு, 1985ல் ஓய்வு பெற்றவர். இந்தியா டுடே சார்பில் அவரை சந்திக்கச் சென்றபோது கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து பேசத் தொடங்கினார். நளினி குறித்து சொல்லும்போது பெருமிதம் தெறிக்கும் குரலில் பேசுகிறார்.

“நளினி – எங்கள் செல்லப் பெண். நல்ல அறிவாளி. பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, அவள்தான் வகுப்பில் முதல் மாணவி. நல்ல ஆங்கிலப் புலமை உண்டு. சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாள். வழக்கு விசாரணையின்போது அவள் பேசிய ஆங்கிலம் எந்த போலீஸ்காரருக்கும் புரிந்திருக்காது” என்று சிரித்தவாறே தொடர்கிறார்.

”நளினிக்கு இசையிலும் நாட்டியத்திலும் மிகவும் ஆர்வம் உண்டு.  நன்றாக சமைப்பாள். சைவம்தான் சமைப்பாள். அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் என் போலீஸ் வேலையில் எப்போதும் கவனம் செலுத்தயதால் இதெல்லாம் அவளுடைய அம்மா வள்ளியம்மாளுக்குத்தான் தெரியும். அவளும் உடல் நலமில்லாமல் போய்ச் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.” என்று பெருமூச்சு விடுகிறார்.

சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. கனத்த மௌனத்தைக் கலைத்தவாறே மீண்டும் அவரே பேசுகிறார். “இப்படியெல்லாம் ஆகுமென்று யாரும் நினைக்கவில்லை. அவள் சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கல்லூரிப் பேராசிரியையாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு நல்ல பதவியிலோ இருந்திருப்பாள். சிறைக்குச் செல்வதற்கு முன்னால் சென்னை அடையாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தாள். அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் அவளுக்கு நேர்ந்த்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்கள். நல்ல அறிவாளிப் பெண் அவள். சிறை அவள் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. அவளுக்கு சோனியா மரண தண்டனை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மரண தண்டனை இல்லை என்றானவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனால் இப்போது தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் சிறையில் அநியாயமாக கழிப்பதற்கு பதில் தூக்கிலேயே போட்டிருக்கலாம். ஆயுள் தண்டனை என்றால் கூட இத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க மாட்டார்கள். அதிலும் நளினிக்கும் இந்தக் கொலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. விசாரணையின்போது அவள் அசராமல் ‘எனக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை’ என்று வாதாடியிருக்கிறாள். போலீஸிடம் அவள் வாதாடலாம். ஆனால் போலீஸ் என்ன சொல்கிறதோ அதுதானே மக்கள் மத்தியில் நிற்கும். அப்படித்தான் ஆகிவிட்டது. நான் சென்னையில் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றினேன். நான் நன்றாக வேலை செய்கிறேன் என்று என்னை மாற்றல் செய்ததுகூட கிடையாது. சென்னையில் எனக்கு வெளியில் யாரிடம் பேசக்கூட முடியவில்லை.  என் போலீஸ்காரன் வேலைதான் என்னைக் கேள்விகளிலிருந்து காப்பாற்றியது. இவன் கண்டிப்பானவன் என்று எனக்காக பயந்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் என் மனைவி, குடும்பத்தாரிடம் எல்லோரும் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள். நான் எப்போதும் பிறருடன் அதிகமாக பழகாதவன் என்பதால் நான் தப்பிதேன். அதன்பின் என் சொந்த ஊரான அம்பலவாணபுரத்துக்கு வந்துவிட்டேன்.

இப்போது பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதியதாக தியாகராஜன் சொல்லி இருக்கிறாரே. சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் கூட இப்போது அவர்களை விடுவிக்கவேண்டும் என்கிறார். ஆனால் அன்றைக்கு ராஜீவ் வழக்கில் சாமானியர்களை சிக்கவைத்தது ஏன்? அன்றைக்கிருந்த காங்கிரஸ் தலைவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
இந்த சிறைவாசத்தால் நளினி இழந்தது அதிகம். ஒரு சாதாரணப் பெண்ணுக்கான எதையும் அவள் அனுபவிக்கவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரே ஒருமுறை என் மகனின் திருமணத்துக்காக அனுமதி பெற்று வந்தாள். நான் போலீஸ்காரன் தானே? எனக்குத் தெரியும் போலீஸ் எப்படி பிரச்சனை செய்யும் என்று. அதையெல்லாம் பார்க்க முடியாது என்னால். என்னையும் கேள்விகளால் துளைத்து எடுப்பார்கள். இதன் காரணமாகவே சென்னையில் நடந்த நான் பெற்ற மகனின் திருமணத்துக்குப் போகவில்லை. என்னைத் தவிர என் குடும்பத்தார் அனைவரும் சென்றார்கள். எதிர்ப்பார்த்தது மாதிரியே நளினி திருமணத்துக்கு வந்தபோது போலீஸ் அத்தனை பிரச்சனை செய்தது. இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தாலேயே நளினியின் அம்மா இறந்தபோது நளினிக்குச் சொல்லாமலேயே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்தபின் தான் விஷயத்தைச் சொன்னோம். தாயின் முகத்தைக் கூட இறுதியாக பார்க்கவில்லை நளினி.

நான் நளினியைப் பார்த்து பத்தாண்டுகள் இருக்கும். சென்னையில் இருக்கும்போது வேலூருக்குச் சென்று சிறையில் பார்ப்பேன். இந்த ஊருக்கு வந்தபின்னால் ஒரே யொரு முறை போனேன். நான் போனது ஒரு சனிக்கிழமை. அன்று பார்க்கமுடியாது என்று அனுமதி மறுத்தார்கள். இரண்டு நாட்கள் கழித்துதான் பார்க்க முடியும் என்றார்கள். நான் எங்கே தங்குவது என்று தெரியாமல் திரும்பிவிட்டேன். நளினிக்கு நான் வந்த தகவலைச் சொல்லியனுப்பினார்கள். ‘என் அப்பா வந்திருக்கிறார். நான் பார்க்கவேண்டும். பார்க்கமுடியாவிட்டாலும் அவருக்குப் பணம் ஏதும் தேவைப்பட்டால் கொடுக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறாள்.  சிறையில் வேலை பார்த்து சேர்த்த பணம் போலிருக்கிறது. நான் தான் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பார்க்க முடியாமல் திரும்பி வந்துவிட்டேன்.

அதன்பின் உங்களுக்கு என்ன தெரியுமோதான் அப்படித்தான் எனக்கும் நளினி குறித்த செய்திகள் தெரியும். தினமும் செய்தித்தாள் படிக்கிறேன். அதில் என்ன வருகிறதோ அதுதான். பிரியங்கா நளினியை சந்தித்தது குறித்தும் நாளிதழ்களில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். ‘என் அப்பாவை ஏன் கொன்றீர்கள்?” என்று கேட்டதாகவும் நளினி ‘எனக்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை” என்று தெரிவித்ததாகவும் பின்னாளில் தெரிந்துகொண்டேன். இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார்களாம். நளினிக்கு சமைத்து சாப்பிட சிறையில் சிறப்பு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. பிரியங்காவிடம் ’சாப்பாடு சமைத்துத்தருகிறேன். சாப்பிட்டுப் போக வேண்டும்’ என்று கூறியதாகவும், ’காபி மட்டும் போதும்’ என்று சொல்லி, காபி சாப்பிட்டுச் சென்றதாகவும் கேள்விப்பட்டேன்.
நளினியை நேரில் போய்ப் பார்க்க ஆசைதான். வயதாகிவிட்டதே. அலைய முடியவில்லை. என்ன செய்ய? இப்போது என்னுடன் ஒரு மாதம் இருக்கவேண்டும் என்று அனுமதி கேட்டிருக்கிறாள். வந்தால் சந்தோஷம். ஆனால் கூடவே போலீசும் வருவாங்களோ?” என்று கேட்டு யோசனையில் ஆழ்கிறார்.

“வரட்டும். பரவாயில்லை. இந்த ஊரில் யாருக்கும் எதுவும் தெரியாமல்தான் இருந்தது. ஒரு வாரத்துக்கு முன் தமிழ் செய்தித்தாள் ஒன்றில் என் பேட்டி வந்தவுடன் இந்த ஊரில் தெருவில் இருப்பவர்களுக்குத் தெரிந்தது. என் குடும்பத்தாரிடம் ஏதாவது கேட்டார்களோ தெரியவில்லை. ஆனால் நான் ஒரு போலீஸ்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் கண்டிப்பானவன் என்று பலருக்குத் தெரியும் என்பதால் என்னிடம் நேராக எதையும் கேட்பதில்லை.

எனக்கு ஓய்வூதியம் வருகிறது. அதற்குள்தான் எல்லா செலவுகளையும் சமாளிக்கிறோம். வீடு சொந்தவீடு என்பதால் கொஞ்சம் பரவாயில்லை. இளைய மகன் பால்பண்ணை வைத்திருந்தான் இங்கே. ஆனால் மாடுகள் திடீர் திடீரென்று காணாமல் போயின. காவல்துறையில் புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. நஷ்டமாகிவிட்டது. இப்போது அந்தத் தொழிலை விட்டாயிற்று. மூத்த மகன் சென்னையில் இருக்கிறான். அவ்வபோது வந்து பார்ப்பான்.

சிறையிலேயே நளினிக்குத் திருமணம் நடந்தது. இதுவரை நளினியின் கணவர் முருகனை பார்த்ததில்லை. அவர்கள் குழந்தையையும் பார்த்ததில்லை. குழந்தை லண்டனில் வளர்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது நளினியின் விடுதலை விரைவில் நிகழும். மூன்றுபேருக்கான தூக்குதண்டனையும் ரத்தாகும் என்று நம்புகிறேன். எல்லோரையும் பார்க்கவேண்டும். குறைந்தபட்சம் நளினிக்கு என்னைப் பார்க்க ஒரு மாதம் அனுமதி கிடைத்தால் நளினியையாவது பார்க்கலாம். நான் வசதி படைத்தவன் இல்லை. உயர் பதவியிலும் இருந்ததில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாதுதான். ஆனால் அதற்காக நான் அரசாங்கத்திடம் கெஞ்சக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். உரிமையை எப்படி கெஞ்சிப் பெறமுடியும்? நான் வயதானவன் இல்லையா? மகளைப் பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்று தோன்றும். அதற்காகவாது இந்த அப்பாவைப் பார்க்க அவளை அனுமதிக்கவேண்டும். வந்து நளினி கையால் சமைத்த சாப்பாடு சாப்பிடவேண்டும்” என்று கூறி கைகூப்பி. விடைபெறும்போது அவர் கண்களில் தெரிந்த ஏக்கமும் கம்பீரமும் கலந்த கலவை அவர் நம்பிக்கையுடன் இருப்பதைக் காட்டியது.

நன்றி : இந்தியா டுடே



Friday, January 17, 2014

தென் இந்திய நிர்பயா

தில்லி மாணவிக்கு நேர்ந்த பாலியல் கூட்டு வன்புணர்வு முடிந்து சரியாய் ஓராண்டு ஆகிவிட்டது. டிசம்பர் 16 அன்று ஓடும் பேருந்தில் அச்சமபவம் நடந்து சில நாட்கள் உடல்ரீதியாக சித்திரவதை அனுபவித்தபின்னர் டிசம்பர் 29ம் தேதி மரணமடைந்தார். தில்லி சம்பவம் பல பெண்களையும் இளைஞர்களையும் வீதிக்குக்கு வந்து போராடவைத்தது. அதே டிசம்பர் மாதம் ஊரெல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் காரைக்காலில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒரு முறையல்ல..இரண்டு முறை சில மணி நேர இடைவெளியில். அதுவும் வெவ்வேறு கும்பல்களால் என்பது உச்சபட்ச  அதிர்ச்சி.

வன்புணர்வுக்கு ஆளான பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் அனைவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் நகரையும் அதைச் சுற்றிய பகுதியையும் சார்ந்தவர்கள். இந்தச் சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று காரணம் கூறி காரைக்கால் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடாச்சலபதியும், ஏட்டு சபாபதியும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான காரணம் வேறு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 24ம் தேதி இரவு நடந்த நிகழ்வுக்கு 26 காலை 3 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. அதிலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டெண்ட் மோனிகா பரத்வாஜ் வந்தபின் தான் அதுவும் நடந்தது. முழுநாளும் ஓர் இரவும் காவல்துறை கட்டப் பஞ்சாயத்து செய்ய முனைந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. காவல்துறை தரப்பில் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இக்குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. 

மோனிகா பரத்வாஜ் விரைந்து செயல்பட்டிருப்பதை பலரும் பாராட்டுகிறார்கள். இப்போது வன்புணர்வுக்கு ஆளான பெண் எப்படி இருக்கிறார்? “அவர் நலமாக இருக்கிறார். தைரியமாக இருக்கிறார். மருத்துவ சிகிச்சை முடிந்து தன் பெற்றோருடன் இருக்கிறார்” என்கிறார் மோனிகா. ஆனால் சமூகமோ அப்பெண்மீது பலவகையான குற்றச்சாட்டுகளைச் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முனைகிறது. 

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் வசிக்கும் தெருவில்தான் இச்சம்பவம் நடந்த அறை உள்ளது. நாஜிம் அளித்த ஒரு பேட்டி சர்ச்சைக்குள்ளானது. அப்பேட்டியில் அவர் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்ணை பாலியல் தொழிலாளி என்றும் வழக்கு பதியுமுன் காவல்துறை இவற்றை கணக்கில் கொள்ளவேண்டும் என்றும் பேசியதாக செய்திகள் வெளியானது. இது குறித்து பெண்ணியவாதிகளும் பெண்ணிய இயக்கங்களும் தங்கள் கண்டனங்களையும் அதிருப்திகளையும் வெளியிட்டனர். ஆனால் நாஜிமிடம் இந்தியா டுடே தொடர்புகொண்டு பேசியபோது “நான் அப்படிச் சொல்லவில்லை. மற்றவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் சொன்னேன். என் பேச்சு திரிக்கப்பட்டது” என்றார். காரைக்கால் காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகரிடம் பேசியபோது “பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்றுதான் நாங்கள் பார்த்தோமேயொழிய அவர் யார் எப்படிப்பட்டவர் என்பது குறித்தெல்லாம் பார்க்கவில்லை. சட்டப்படி நாங்கள் செய்யவேண்டியதைத்தான் செய்தோம்.” என்றார்.

”நாஜிம் அப்படிச் சொன்னாரா இல்லையா என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாததால் நான் அவர் சொன்னது சரியா என்கிற வாதத்துக்குள் போக விரும்பவில்லை. ஆனால் பலர் அப்படிச் சொல்வதைப் பார்க்கிறேன். எப்போதுமே பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றச்சாட்டுகளை வைத்து குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் போக்கு இங்கே இருக்கிறது. தில்லி சம்பவத்திலும் அந்தப் பெண் ஏன் இரவு நேரத்தில் ஓர் ஆணுடன் போனாள் என்று கேட்டார்கள்? இப்படி எல்லாம் கருத்துக்களை முன்வைத்து நடந்த பலாத்காரத்துக்கு நியாயம் கற்பிக்க முனைவதில் மறைமுக வன்மம் அடிமனதில் ஒளிந்திருக்கிறது. இப்படி ஒரு பெண் இருந்தால் அவளை இப்படி நடத்தலாம் என்கிற அதிகாரத்தை இவர்களுக்குத் தந்தது யார்? ஒரு பெண் ஆபாசமாக உடையணிந்திருந்தான் அவளை பலாத்காரம் செய்யலாம் என்கிற கொடூர மனம் இருப்பது சமூகத்தின் மோசமான குறியீடு” என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி. மூத்த அரசியல்வாதியும் சி.பி.ஐ. கட்சியின் தலைவருமான நல்லகண்ணு “இது ஒரு மோசமான போக்கு. பாலியல் தொழிலாளி என்று பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிக் கூறுவது அபாண்டம். அப்படியே இருந்தாலும் வன்புணர்வு நியாயமாகிவிடுமா என்ன?” என்கிறார். ”தில்லி சம்பவம்போலவே இதிலும் அப்பெண்ணின் ஒழுக்கம் குறித்து பலர் சொல்ல கேட்கிறோம். அப்படியெல்லாம் கூறுவது கண்டிக்கத்தக்கது” என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சுகந்தி.

சட்டம் என்ன சொல்கிறது? 10 ஆண்டுகளுக்கு முன்னால் மும்பையில் சுமன் ராணி என்கிற பெண் தன் காதலருடன் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது ரயில்வே போலீசார் விசாரணை என்கிற பெயரில் அவரை அழைத்துப்போய் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு கிடைத்த தண்டனையின் அளவைக் குறைக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்தபோது நீதிபதிகள் “இந்தப் பெண் இன்னொரு ஆடவனுடன் ஓடிவந்தவள். அவள் பலமுறை தன் காதலனுடன் உறவுகொண்டிருக்கிறாள். அவள் ஒன்றும் கன்னித்தன்மையுடன் இல்லை” என்றுகூறி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்தனர். இந்த வழக்கை நினைவுகூர்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி. 

“அப்போது இந்தியா முழுவதும் இந்தத் தீர்ப்பு வாசகங்களை பெண்ணியவாதிகளும் இயக்கங்களும் கடுமையாக எதிர்த்தன. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, இப்படியான பெண்களுக்கெதிரான மோசமான கருத்த்துக்களை நீதிபதிகள் சொல்லக்கூடாது. அது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றது. மாவட்ட நீதிபதிகள், சில சமயங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுமேகூட பெண்கள் குறித்து மோசமாக கருத்து தெரிவிப்பது தொடர்கிறது. தில்லி கீழ் நீதிமன்றத்தில் பெண்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டார் அண்மையில் ஒரு நீதிபதி. தில்லி உயர் நீதிமன்றம் இப்படி பெண்களுக்கு அறிவுரைகள் வழங்குவதையும் தீர்ப்பு சொல்லும்போது வழக்குக்கு தொடர்பே இல்லாமல் பொதுமக்களுக்கு கருத்து சொல்வதையும் நீதிபதிகள் நிறுத்தவேண்டுமென்று அறிவுறுத்தியது. இப்படி கற்றுணர்ந்த நீதிபதிகளே இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்போது சாதாரண மக்கள் குறித்து கேட்கவா வேண்டும்? மேலை நாடுகளில் கணவன் - மனைவி உறவில் கூட விருப்பமில்லாமல் மனைவியிடம் கணவன் உறவுகொண்டால் அது marital rape என்கிற வகையின்கீழ் வரும். ஆனால் இந்தியாவிலோ ஊடலில் சமாதானத்துக்கு கூடல்தான் என்கிற கலாசார மனோபாவம் இருக்கிறது. இது மணவாழ்க்கையின் ஒரு சுவையான பகுதியாக இருக்கக்கூடும். ஈவு இரக்கமில்லாததாகவும் இருக்கக்கூடும். அது இலக்கிய ஊடலா வன்முறையா என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் சொல்ல வேண்டும். ஆகவே இது ஒரு சிக்கலான விஷயம். சட்டம் சொல்வதென்னவென்றால் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும்கூட பணம் கொடுத்திருந்தாலும்கூட ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளை நெருங்குவது குற்றம்தான். அது மனித பண்பாட்டுக்கே எதிரானது. ஆனால் அதையும் செய்யத் துணியும் கூட்டம் இங்கே இருக்கிறது. எல்லாவற்றையும் செய்துவிட்டு அவள் பாலியல் தொழிலாளி என்று குற்றம்சாட்டி நியாயப்படுத்தும் இச்சமூகத்துக்கு மனநல மருத்துவம் தேவைப்படுகிறது” என்று தன் கருத்துக்களை முன்வைக்கிறார் அருள்மொழி.

உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனும் அண்மையில் ராமநாதபுரத்தில் ஒரு மகளிர் காவல்நிலையத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றுகையில் தில்லி சம்பவம் குறித்து குறிப்பிட்டுப் பேசுகையில் ‘இரவில் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது’ என்கிற கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்ராம்பாபுவும் தன்னை குற்றம்சாட்டிய சிறுமிக்கு ஆண்களை ஈர்க்கும் வியாதி இருக்கிறது என்றார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தருண் தேஜ்பால், ஏ.கே. கங்குலி ஆகியோர் இதையேதான் செய்தனர். ஆகவே பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் இல்லையெனில் நாங்கள் ஏதாவது செய்வோம் என்கிற மனநிலையில்தான் உயர்பொறுப்பில் உள்ளவர்களே இருக்கிறார்கள் எனும்போது சாதாரண மக்களும் அவர்கள் வழியையே பின்பற்றுகின்றனர். 

காரைக்கால் சம்பவத்தைப் பொறுத்தவரை சம்பவம் நடந்தது புதுச்சேரி மாநிலத்தில். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட எல்லா விஷயங்களுக்கும் புதுச்சேரி அரசுதான் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். புதுச்சேரியில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகுமாறனிடம் பேசியபோது “ முதலில் இந்தச் செய்தி எனக்கு வந்து சேர்ந்தபோது நான் நம்பவில்லை. இவ்வளவு பெரிய விஷயத்தை காவல்துறை மூடி மறைக்குமா என்று நினைத்தோம். ஆனால் காரைக்கால் நண்பர்கள் பலரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் விஷயத்தை உறுதிப்படுத்தினார்கள். மோனிகா பரத்வாஜிடம் விஷயத்தைக் கொண்டுசென்றபின் அவர் துரிதமாக நடவடிக்கை எடுத்தார். உள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து சமாதானம் பேச முயன்ற இருவரை அவர் இடைநீக்கம் செய்தார். அவர் வந்தபிறகே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்டது என்பது துறைரீதியான நடவடிக்கை. ஆனால் 15 பேரில் நான்கு பேரின் மீது குற்றம் நடந்தபின் தகவல் தெரிவிக்கவில்லை என்று 202 பிரிவின் கீழ் வழக்கு பதிந்திருப்பதைப் போல காவல்துறையினர் மீதும் பதியவேண்டும். இதற்கான அழுத்தங்களை நாங்கள் தொடர்ந்து கொடுப்போம். அந்தப் பெண்ணின் குடும்பம் ஏழைக்குடும்பம். இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. உடனடியாக அரசு அவருக்கு 5 லட்சம் இழப்பீடு தர ஏற்பாடு செய்யவேண்டும்.” என்கிறார். ”

தில்லி சம்பவத்துக்குப்பின் விரைவு நீதிமன்றம் மூலம் விரைவாக வழக்கு நடத்திமுடித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுபோலவே இந்தச் சம்பவத்திலும் விரைந்து வழக்கை முடிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஏனெனில் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்கிறார் சுகுமாறன். வழக்குகள் எந்தளவுக்கு விரைந்து முடிக்கப்படும். தடய அறிவியல் துறையின் முடிவு வெளிவர கொஞ்சம் தாமதமாகும். அதுவந்தவுடன் வழக்கு விரைவாக விசாரிக்கப்படும்” என்கிறார் மோனிகா.

இச்சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளும் ஒருபக்கம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. “பா.ஜ.க. இன்று ஆளுநரை சந்தித்து இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரியது. அதுபோலவே இந்துமுனணியும் டி.ஜி.பி.யிடம் மனு அளித்தது. இவர்களுக்கு என்ன திடீர் அக்கறை என்று பார்த்தால் இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இஸ்லாமியர்களும் இருப்பதால் அதை பயன்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின்மீது சேறுபூசப் பார்க்கிறார்கள்” என்கிறார் சுகுமாறன். 

இதற்கிடையே சமூக ஊடகங்களில் காரைக்கால் சம்பவம் தொடர்பாக மதரீதியாகவும் சாதிரீதியாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலித்துகளும் இஸ்லாமியர்களும்தான் என்று திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது “இதில் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இருக்கிறார்கள்” என்கிறார் ஆய்வாளர் ராஜசேகர். “இது ஒரு கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை மதம் மற்றும் சாதிய ரீதியில் அணுகுவது. இந்த சாதி, இந்த மதம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது தேவையில்லாதது. அது வழக்கின் போக்கை திசைதிருப்பும் செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்கிறார் சுகந்தி. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக டிசம்பர் 31 அன்று காரைக்காலில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. “இதற்கும் முந்தைய வழக்குகளில் புதுச்சேரி சிபிசிஐடி விசாரணை குறித்து எங்களுக்கு திருப்தி இல்லை. ஆகவே இந்த வழக்கும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இது மிக முக்கியமான வழக்கு. விசாரணை நாகரிமகான முறையில் இருக்கவேண்டும். அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு தக்க தண்டனையை உடனடியாக வாங்கித் தந்து அவருக்கு நீதிகிடைக்கவேண்டும்.” என்கிறார் சுகந்தி.

“இதில் குற்றம்சாட்டப்பட்ட நாசர் என்பவர் முன்னாள் பா.ம.க. காரர். இப்போது தி.மு.க.வில் இருக்கிறார். அதனால் உள்ளூர் பா.ம.க. தலைவர் தேவமணி ஒருபக்கம் முதல்வருக்கு தன் கட்சித்தலைவர் மூலம் அழுத்தம் கொடுக்கிறார். பாதிப்புக்குள்ளான பெண்ணுடைய தோழியின் காதலர் மதனுடைய உறவினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறார். இவ்விவிஷயத்தை உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று மதன் மீதும் 202 பிரிவு வழக்கு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக பயன்படுத்த எண்ணுகிறது பா.ம.க. நாசர் உட்பட பலர் நாஜிமுக்கு பணியாற்றுபவர்கள் என்பதால் தி.மு.க. ஒருபுறம் அழுத்தம் கொடுக்கிறது. அரசியல் கட்சிகள் இதில் தலையிடுகின்றன” என அரசியல் தொடர்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவரும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கும் பாலச்சந்திரனிடம் பேசியபோது, “உண்மையாகவே இதில் தலையிடவேண்டிய புதுச்சேரி மகளிர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதில் தலையிடாமல் மௌனம் ” என்கிறார். நாசர் ஏற்கனவே 1994ல் ஒரு வன்புணர்வு வழக்கோடு தொடர்புடையவர் என்று காரைக்கால் காவல்நிலைய தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் நாசர் ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து இப்போது தி.மு.க.வில் இருக்கிறார் என்பதையும் காவல்நிலையத்தில் உறுதிப்படுத்துகிறார்கள். இதுகுறித்து இந்தியா டுடே நாஜிமிடம் கேட்டபோது “இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லை. இதில் யாரும் என் உறவினர்கள் கிடையாது” என்று இந்தியா  டுடேயிடம் தெரிவித்தார்.  

”இவ்வழக்கில் தொடர்புடைய ஒரேயொருவர் 16 வயது. அவர் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார். ஒருவர் ஜனவரி 3 அன்று சரணடைந்தார். அடையாளம் காணும் அணிவகுப்பு நடந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஒருவரை இன்னமும் காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடுகிறது” என்கிறார் சிபிசிஐடி புதுச்சேரிக் குழுவைச் சேர்ந்த செல்வம். 

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் எந்த பத்திரிகையாளரையும் சந்திக்கவில்லை. “நாங்கள் அவரை சந்திக்க விரும்பினோம். ஆனால் அவர் யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்லை என்று கூறிவிட்டனர் அவரது பெற்றோர். அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்கிறார் சுகந்தி.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் 21 வயதுக்குட்பட்டவர்கள். மிக இளம் வயதில் இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். காலம் முழுவதும் சிறையில் கழிக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். தில்லி பாலியல் வன்புணர்வில் தொடர்புடைய ராம் சிங் சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். இப்படிப்பட்ட குற்றங்களை செய்பவர்கள் அடுத்தவர் வாழ்க்கையை சிதைப்பதுடன் தன் வாழ்க்கையையும் சேர்த்து சிதைத்துக்கொள்கின்றனர். 

பேருந்துக்களிலும் இன்னபிற பொது இடங்களிலும் ஆண்கள் பெண்கள் தொந்தரவுக்குள்ளாகும்படி பார்வையால் அல்லது கைகளால் சீண்டுவதும் அத்துமீறுவதுமான செயல்களில் ஈடுபடுவதுதான் தொடக்கம். காரைக்கால் சம்பவம் இதன் உச்சகட்டம். இவற்றின் பின்னாலுள்ள உளவியல் யோசிக்கப்படவேண்டியது. பிற பெண்கள் அனைவருமே தன்னுடையை உடைமைகள் என்கிற மனோபாவம் அது. இன்னொருவருடைய பொருள் என்றால் எடுத்து பயன்படுத்த தயங்கும் கைகள் தன்னுடையது என்றால் உரிமையுடன் எடுப்பதுபோல, எல்லா பெண்களின் உடலும் தன் சுகிப்புக்குரியது என்று எண்ணும் ஆண்தனம்தான் ஓர் ஆணை, அடுத்தவர் உடலென்றாலும் பெண்ணை தீண்டவும் முறைக்கவும் உற்றுப் பார்க்கவும் வைக்கிறது. பெண் என்பவள் ஒரு தனியான ஜீவன். அவள் உடல் அவளுக்குத்தான் சொந்தம் என்கிற உணர்வும் புரிதலும் எள்ளளவும் இங்கே இல்லை. அது ஒரு பண்டம். ஆண்களுக்கான ஒரு நுகர்வுபொருள் அது. அந்த நுகர்வு பொருளை ஆண் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த அவனுக்கு உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்கிறான். ‘இது இன்னொரு உடல், இன்னொரு ஜீவனுடைய உடல்’ என்கிற உணர்வின்றி காம வேட்கையை பார்வையால் தணித்துக்கொள்ளுபவர்களிலிருந்து காரைக்கால் கூட்டு வன்புணர்வில் சிக்கியிருப்பவர்கள்வரை எல்லொருக்கும் ஒரே ஒரு பார்வைதான் இருக்கிறது. அது பெண்ணுடல் தன் சுகிப்புக்குரியது என்கிற உடைமை உணர்வுதான். இந்த உடைமை உணர்வுக்குத்தான் நிர்பயாக்கள் பலியாகிறார்கள். வட இந்தியாவின் தில்லியாக இருந்தாலும் தென்னிந்தியாவின் காரைக்காலாக இருந்தாலும் நிர்பயாக்கள் இந்தியாவில் முழுவதும் சிதறிக்கிடக்கிறார்கள்.

(நன்றி : இந்தியா டுடே)

Thursday, January 09, 2014

வஞ்சியர் காண்டம்





சென்றவாரம் மதுரையில் மன்னர் கல்லூரி திடலில் பெரிய கூட்டத்தின் நடுவே தோழர் எஸ்.வி.ராஜதுரை, பேராசிரியர் ராமானுஜம் இவர்களுடன் அமர்ந்து பார்த்த நாடகம் வஞ்சியர் காண்டம். பேராசிரியர் ராஜு இயக்கத்தில், பிரளயனின் பிரதியாக்கத்தில் உருவான நாடகம். பெரும்பாலும் பெண்கள் மையத்தில் நடிக்கும் நாடகம் இது. சிலம்பில் மயங்காதவரும் உண்டா என்ன? இளங்கோவடிகளின் கதைசொல்லல் பாணியும், புகார்க்காண்டம், வஞ்சிக்காண்டம், மதுரைக்காண்டம் என்று பயணிக்கும் கதையும், அதில் பொங்கும் காதலும், காமமும், ‘நடந்தாய் வாழி காவேரி’ என வாழ்த்துமாக சிலம்பு தமிழை விரும்பும் எல்லோரும் விரும்பும் ஒன்று. நானும் அவ்வாறே விரும்பியிருக்கிறேன்.பூம்புகாருக்கு முதல்முறை சென்றபோது சிலம்பு ஒரு கற்பனை காவியம் என்பதை மறந்து அது ஏதோ கண்ணகி, கோவலன், மாதவி கால்பட்ட இடம்போன்றதொரு உணர்வு தோன்றியது. அதெல்லாம் கொஞ்ச காலம்.மாய உலகம் அல்லது ஃபேண்டஸி பிடிக்கிற வயதுவரைதான். 

கண்ணகியை மக்களுக்கு அதிகாரத்தை எதிர்த்தவளாகவே காட்டின திரைப்படங்களும் நாடகங்களும்.அப்புறம் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கி, அரசியல் மண்டைக்குள் நுழைந்தவுடன் சிலம்பு முன்வைக்கும் ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்கிற பகுத்தறிவுக்குஒவ்வாத கருத்தையும், கண்ணகியின் அடிமைத்தனத்தையும் எண்ணி எரிச்சல்படுவதுண்டு. அந்த எரிச்சலின் வெம்மையில் எழுதப்பட்ட நாடகமாக உள்ளது வஞ்சியர் காண்டம். 

கண்ணகி மாதவியை வியக்கும் காட்சியில் அவளுடைய அழகுகுறித்து தமக்கு தெரியாதென்றும் அவளுடைய புலமை குறித்து தான் உணர்ந்துகொண்ட தருணத்தைக் கூறும் பாங்கில் மனம் இன்னும் லயித்துக் கிடக்கிறது. 
’அடிமைகள்..அடிமைகள்...’ 
‘ஆம் நானும் கருவுற்றேன்.. ஏன் தெரியுமா’
என்று அஜிதாவின் குரல் அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்ட அந்த நொடி உடல் சிலிர்த்து கண்ணீர் உருண்டோடியது. காதல் குறித்து எனக்கா தெரியாது என்று தன் கதையைச் சொல்லும் அந்த வளர்ப்புத்தாயின் காதல்கதை சொல்லொண்ணா துயரை உருவாக்கி உறையச் செய்கிறது. 

‘புணர்ச்சியின் உச்சத்தில் என் சுவாசம் சீறும் பாம்பின் ஒலியை ஒத்ததாக இருக்குமென்று என் காதல்கொழுநன் சொல்லுவான்’ - இந்த ஒரு வரி அந்த காதலின் அந்நியோன்யத்தையும் நெருக்கத்தையும், அன்பையும் அவர்களிடையே பொங்கிய காதலின் அளவையும் நமக்குச் சொல்லிவிடுகிறது. 

காதல்கொழுநன் கொல்லப்பட்டதை அவள் விவரிக்கும் இடத்தில் நீர்சுரக்காத விழிகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அடிமையாய் இருக்கும் பெண்ணொருத்தியின் பார்வையில் விரியும் கண்ணகியின் அடிமைத்தனம் பார்வையாளர்களுக்கு கடத்தப்படுவது அழகான முரண்.. பெண்கள் பாலியல்ரீதியாக சுரண்டப்படுவதையும் குறிப்பாக தனக்கு ஏவல் செய்யும் பெண்களை ஆண்கள் தங்கள் இன்பத்துக்காக மட்டுமல்ல, தங்கள் வீட்டுப்பெண்கள் குழந்தைபெற்றுக்கொள்ளும்போது அக்குழந்தைக்கு பாலூட்ட அவர்களும் அதே சமயத்தில் கருவுறுவார்கள் என்கிற செய்தியையும் ஓர் உரையாடல் நமக்கு உணர்த்துகிறது. 



இசை இந்நாடகத்துக்கு உயிர்போல. அந்த ஆண்குரலும் பெண்குரலும் இணையும்போது அத்தனை கம்பீரம். ஆனால் தனியாக பெண் குரல் கேட்கும்போது அதில் தெரியும் பார்ப்பனத்தன்மை நாடகத்துக்கு சற்று பொருந்தாததுபோன்று இருக்கிறது. நடிகர்களின் இருப்பு மேடையில் தனியொரு கம்பீரத்தையும் உருவாக்குகிறது. ஒளியமைப்பும் பொருத்தமாக காட்சிகளுக்கேற்ப விளையாடுகிறது.

கோவலன் கண்ணகியின் வண்ணச்சீறடி குடிசையில் படுகிறதே. பட்டுமெத்தையில் படுத்துறங்கிய பெரும் செல்வச் செழிப்புள்ள மாசாத்துவானின் மகள் இப்படி வறுமையில் வாடுகிறாளே என்று குற்றவுணர்வில் வருந்துகிறான். அய்யை கண்ணகியை நோக்கி கேள்விமேல் கேள்வி எழுப்பும் காட்சியில் அய்யையாக நடித்த பெண்ணின் முகபாவம் கண்களில் இன்னும் நிற்கிறது.

நாடகத்தின் இடையே கண்ணகிக்கூத்து நடப்பதாக ஒரு காட்சி வருகிறது. அக்காட்சியில் பெண்கள் கொதித்தெழுந்து கண்ணகியை பத்தினி தெய்வமாக்கியவர்களை சீற்றத்துடன் கேள்விகேட்பார்கள். கண்ணகியை போர்த்தெய்வம் என்று கூறியவர்களை நோக்கிய கேள்வியில் சமகாலத்தில் நாம் அறிந்த போர்கள் எல்லாம் நினைவுக்கு வந்துபோகின்றன. போரின் வலி தெரியுமா உங்களுக்கு என்கிற கேள்வி பார்வையாளர்களுக்கு ஏதுவாக இருந்தாலும் அந்த இடத்தில் நாடகம் சென்ற தோரணையில் அப்பெண்கள் கண்ணகியை போர்த்தெய்வம் என்று சொன்னதற்காக சாடுவதோடு கண்ணகியை பத்தினி தெய்வமாக்கியதையும் அவளுடைய முட்டாள்தனத்தையும், ஏமாந்ததையும் இன்னும் கூடுதலாகச் சொல்லுவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்தக் காட்சி முடிகையில் வசனங்களாக அவை இல்லாமல் கையில் ஒற்றைச் சிலம்புடன் கைநீட்டி நீதிகேட்கும் கண்ணகியின் உருவத்தை உருமாற்றும் பெண்களின் மௌன அசைவுகள் அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிவிடுகின்றன.

-

வஞ்சியர் காண்டம் நாடகத்தை சென்றவாரம் மதுரையில் பார்த்த நாளிலிருந்து அதுகுறித்து எழுதும் எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. எழுதாமலிருந்தது ஒருவகையில் நல்லதுதான் எனும்படியாக ஒரு சந்திப்பு அமைந்தது. அந்த சந்திப்புக்குப் பின் இதை எழுதுவது இன்னும் பொருத்தம். இலங்கை மலையகத்திலிருந்து வந்திருக்கும் யாழினியை சந்தித்தேன். சென்னை பல்கலைக்கழகம் நடத்திய பெண்ணிய உரையாடலின் ஒரு பகுதியாக அவர் தன்னுடைய கட்டுரையொன்றை வாசித்தார். ‘முகாம் கூத்து’ என்கிற அக்கட்டுரை பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பல விஷயங்களை அறியத் தந்தது. ‘முகாம் கூத்து’ என்கிற வார்த்தையே புதியது. இலங்கையில் முகாமில் இருக்கும் தமிழர்கள் முகாம்களுக்குள்ளாக நடத்தும் கூத்து முகாம்கூத்து. இந்த முகாம் கூத்தில அதிகம் விரும்பிப் பார்க்கப்படுவது கோவலன்கூத்து என்று குறிப்பிட்டார் யாழினி. இதற்கான காரணத்தை பார்வையாளர்கள் வினவியபோது அவர் சொன்ன பதில் ”மதுரைக்காண்டத்தில், கண்ணகி அரசனிடம் நீதிகேட்டு வந்து மதுரையை எரிப்பதில் முகாம்வாழ் தமிழ்மக்களுக்கு ஒரு ஆறுதல். நம்மால் முடியாததை அரச அதிகாரத்தை எதிர்க்கிறாள் கண்ணகி என்று அதற்காகவே அந்த கோவலன்கூத்தை விரும்புகிறார்கள்” என்று அதற்குப் பின்னான உளவியலைக் கூறினார்.

ஈழம் என்கிற தங்கள் கனவை இழந்து, வீடிழந்து உற்றாரை இழந்து நிற்கும் தமிழர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைக் காண்பதற்கென்றே புதிதாக கூத்து கற்றுக்கொண்டு குழுவில் தங்களை இணைத்துக்கொண்டு தாயோ தந்தையோ வாழும் வேறொரு முகாமுக்கு கூத்துகட்டச் சென்று அந்த சாக்கில் அவர்களை பார்த்துவருவதுண்டு என்றார். நெடுநேரம் கல்லாய் உறைந்து கிடந்தேன். இப்படியான ஒரு சூழலில் கோவலன்கூத்தில் வரும் கண்ணகியின் பாத்திரத்தில் அவர்கள் தங்களை வைத்துப் பார்க்கிறார்கள். எனக்கு சென்றவாரம் பார்த்த வஞ்சியர் காண்டம் நினைவுக்கு வந்தது. 

நாம் ஒரு பாதுகாப்பான நிலத்தில் இருக்கிறோம். நம் பெண்ணிய தர்க்கங்கள் மிகவும் சரி. கண்ணகியின் அடிமைத்தனத்தை கேள்விகேட்கிறோம். ஆனால் அங்கே முகாம்களில் கண்ணகி விடுதலையின் குறியீடாகிறாள். இந்த விந்தை என்னை உண்மையில் சோர்வுக்குள்ளாக்குகிறது. முகாம் மக்கள் வஞ்சியர் காண்டம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான காலம் கனிந்துவரவில்லை. வஞ்சியர்க் காண்டம் போரையும் போர்த்தெய்வமாய் கண்ணகியை வழிபடுவதையும் எதிர்க்கிறது. கிட்டத்தட்ட கண்ணகி முகாம்களில் அப்படித்தான் பார்க்கப்படுகிறாள் என்று தோன்றுகிறது. கண்ணகியை அதிகாரத்தை மறுத்தவளாகக் காட்டும் கூத்துகளை மக்கள் ரசிக்கிறார்கள். தங்களால் முடியாத ஒன்றை கண்ணகி செய்கிறாள் என்று எண்ணுகிறார்கள். அவர்களிடம் நாம் கண்ணகியை வேறுமாதிரி பாருங்கள். அவளுடைய அடிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்று கேட்கும் சக்தி இப்போதைக்கு இல்லை. அவர்கள் பார்க்கட்டும். கண்ணகி இப்போதைக்கு அவர்களுக்கு அதிகாரத்தை எதிர்த்தவளாகவே இருக்கட்டும். என்றாவது ஒருநாள் முகாம்கள் கலைக்கப்பட்டு அந்த மண்ணில் தத்தமது வீடுகளுக்கு அவர்கள் திரும்பட்டும்.

வஞ்சியர்க் காண்டம் பேசும் நுண்ணரசியல்போல, அது சிலம்பை அணுகுவதுபோல ஒரு பிரதியை அல்லது ஆக்கத்தைப் பார்க்கும் போக்கை போர் எப்படியெல்லாம் தின்றிருக்கும்! போர், வேதனை, வலி தவிர வேறொன்றையும் பற்றியும் யோசிக்காத அளவுக்கு அம்மக்களை வைத்திருக்கிறது அதிகார வல்லமை பொருந்திய அரசு. இன்னும் இன்னும் எதையெல்லாம் போர் விழுங்கியிருக்கும்? தமிழ்மக்களின் கலை, அறிவு, நுண்ணரசியல், காதல், கலைகள் என எல்லாவற்றையும் தின்று செரித்து நிற்கும் அரசதிகாரத்தை எதிர்க்கும் ஏதோவொன்றை ஒவ்வொரு பிரதியிலும் தேடும் மனம் எப்போது அமைதியுற்று பெண்ணியமோ அல்லது வேறு எந்த இசமோ பேசப்போகிறது?எந்த நாளில்? எந்த நொடியில்? தெரியவில்லை. ஆனால் கண்ணகி விடுதலையின் குறியீடாகவும் அதிகார எதிர்ப்பின் சித்திரமாகவும் முகாம் மக்கள் மத்தியில் பதிந்துபோன சுவடுகூட இல்லாமல் அவளை பெண்ணிய நோக்கில் விமர்சிக்கும் மனநிலையும் காலமும் விரைவில் அவர்களுக்குக் கிட்டவேண்டும் என்று விழைகிறேன். எவர் கையிலுள்ளது அதற்கான திறவுகோல்?