Sunday, September 09, 2012

கூடங்குளம் பெண்கள் குழந்தைகளின் சென்னை வருகை

துவரை, இடிந்தகரையில் இருந்து போராடிய மக்கள், திடீரென்று சென்னையைத் தொட்டார்கள்! 

இடிந்தகரை மக்களை குற்றவாளிகளாகத்தான் கருதுகிறது காவல் துறை. இடிந்தகரையில் இருந்து குழந்தைக ளோடு சென்னைக்கு வந்த பெண்கள் சொன்ன தகவல்கள், அப்படித்தான் நினைக்க வைக்கின்றன.

சென்னைக்கு வந்த 20 பேர் குழுவில் இருந்த சேவியரம்மா, ''நாங்க தனியார் பஸ்ல பயணிகளோடு பயணிகளா வந்தோம். திசையன்விளை வரும்போதே ஒரு போலீஸ்காரர் பஸ்ல ஏறி, எங்களை யார் என்னன்னு விசாரிச்சார். 'நாங்க கிறிஸ்துவ அமைப்பு சார்பா குழந்தைகளை சாந்தோம் சர்ச், கோல்டன் பீச் சுத்திக் காண்பிக்க டூர் கூட்டிட்டுப் போறோம்’னு சொன்னோம். வேற வழியில்லாம பொய் சொல்ல வேண்டி இருந்துச்சு. 'நீங்க எல்லாரும் ஒரு பஸ்லதான் வர்றீங்களா, வேற ஆட்கள் வேற பஸ் எதுலயாவது வர்றாங்களா?’ன்னு துருவித் துருவிக் கேட்டார். 'இந்த பஸ்ல மட்டும்தான் வர்றோம்’னு சொன்னோம். அப்புறம் மதுரையில் ரெண்டு போலீஸார், பஸ்ஸை நிப்பாட்டி ஏறினாங்க. 'நாங்க இடிந்தகரையில இருந்து வர்றோம்’னு சொன்னவுடனேயே, 'சென்னையில குண்டு வீசத்தான் வர்றீங்களா? யார் கழுத்தை நெரிக்கப் போறீங்க?’னு கேட்டு மிரட்டினாங்க.
அப்புறம் அதிகாலை 4 மணிக்கு பஸ்ஸை பெருங்களத்தூரில் நிறுத்தினாங்க. அங்கேயும் போலீஸ் வந்து எங்களை இறங்கச் சொல்லி மிரட்டுச்சு. குழந்தைங்க பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்க. 6.30 மணி வரைக்கும் பஸ் அங்கேயே நின்னுச்சு. பஸ்ல இருந்த மத்த பயணிகள் சத்தம் போடவும், அவங்களுக்கு மட்டும் வேற பஸ் ஏற்பாடு பண்ணி அனுப்பிட்டாங்க. 'நாங்க கோயம்பேட்டுக்குப் போகணும். எங்க சொந்தக்காரங்க எங்களைக் கூட்டிட்டுப் போகக் காத்திருப் பாங்க’ன்னு பிடிவாதமா நாங்க பஸ்ஸை விட்டு இறங்கலை. அப்புறம் முன்னாடி பின்னாடி போலீஸ் ஜீப் வர, எங்களை ஏதோ குற்றவாளிங்க மாதிரி கோயம்பேடு வரை கூட்டிட்டு வந்தாங்க. நாங்க தங்குற இடத்திலும் போலீஸ் வெளியே நின்னுக் கிட்டே இருந்தது. இப்போ இங்கேயும் நிக்கிறாங்க.

இடிந்தகரையில் இருந்து வர்றோம்னு சொன்னவுடனேயே போலீஸ்காரங்க பார்த்த பார்வையே வேற. அந்த ஊர்ல பிறந்தது எங்க குற்றமா? நாங்க என்ன பாவம் பண்ணினோம்? ஒரு வருஷமா எந்த வன்முறையிலும் இறங்காம அகிம்சை வழியிலதானே போராடுறோம். எங்களை இவ்வளவு அவமரியாதையா நடத்தணுமா போலீஸ்? இந்தப் பச்சை மண்ணுங்கதான்  குண்டு வீசப் போகுதுங்களா?'' என்றார் குமுறலுடன்.
''எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி திரும்பத் திரும்ப வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகச் சொல்லி கொச்சைப்படுத்துகிறார். உண்ணாவிரதப் போராட் டத்துக்கு எதுக்குப் பணம்? ஒரு கொட்டகையைப் போட்டு அதுக்குக் கீழே உட்கார்ந்திருக்கோம். எங்களைப் பார்க்க பல அரசியல் கட்சிகள், இயக்கங்களில் இருந்து வர்றாங்க. எங்களோட அதிகபட்சச் செலவு அவங்களுக்கு ஒரு தண்ணீர் பாக்கெட் கொடுக்கிறதுதான். இதுக்கு என்ன செலவாகிடும்? விவசாயிகளும், மீனவர்களும் 100 ரூபா கிடைச்சா அதுல 10 ரூபாயைப் போராட்டத்துக்குக் கொடுக்கிறாங்க. அதனால் எங்க போராட்டத்தைத் தயவு செஞ்சு கொச்சைப்படுத்தாதீங்க'' என்று அந்தப் பெண்கள் கேட்டுக்கொண்டனர்.

''குழந்தைகளிடம், கனவு காணுங்கள் என்றார். அப்துல் கலாம். ஆனால் எங்கள் பிள்ளைகளோ இரவில் கனவு கண்டு உளறும்போதுகூட, 'அணு உலை வேண்டாம்’ என்றுதான் சொல்கிறார்கள். ஓட்டுக்கு மட்டும் இடிந்தகரை மக்கள் வேண்டும். ஆனால், எங்க கோரிக்கையை மட்டும் கண்டுக்க மாட்டாங்களா? காற்றாலை, அனல் மின்சாரம்னு எப்படி வேணும்னாலும் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். மக்களைக் கொன்னுதான் மின்சாரம் உற்பத்தி பண்ணணுமா? நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கு மட்டும் பயன்படுத்தினாலே போதும். அதை வேற மாநிலங்களுக்கு அனுப்பிட்டு, தமிழர்களுக்குன்னு சொல்லி எங்க ஊரை நாசமாக்குறாங்க. பொய்யா மின்வெட்டுன்னு ஜோடிச்சு, கூடங்குளம் செயல்பட ஆரம்பிச்சா மின்வெட்டு போயிடும்னு தமிழ்நாட்டு மக்களை நம்ப வைக்கிறாங்க.

நாங்க எல்லாருமே இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டோம். முதல்வரும் ஒரு பெண்தான். அதனால் எங்களைப் புரிஞ்சுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு. எங்களுக்கு ஆஸ்பத்திரி கட்டித் தர்றாங்களாம். எங்களுக்கு ஆஸ்பத்திரி வேண்டாம். ரோடு வேண்டாம். அணு உலையும் வேண்டாம். அதுக்குப் பதிலா ஒரு தொழிற்சாலை கட்டுங்க போதும்'' என்று கண்ணீர் விட்டு அழுதனர்.  

இடிந்தகரை மக்கள் மேல் போட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் குழந்தைகள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குழந்தைகளான மலியாவுக்கும் சாஷாவுக்கும் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிக் கடிதம் எழுதி, அதை அமெரிக்கத் தூதரகத் தில் ஒப்படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய மக்களுக்கும், ரஷ்ய மக்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்களையும் அந்தந்தத் தூதரகங்களில் ஒப்படைத்துள்ளனர். முதல்வரைச் சந்திக்க முடியாமல் முதல்வரின் தனிப்பிரிவில் அவருக்கான மனுவைச் சேர்த்துள்ளனர் குழந்தைகள்.  எல்லைகளைக் கடந்தும் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது!


படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

1 comment:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_26.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete